மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 64 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 190 ரன்கள் குவித்தது. இதன்பின் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே பெற்று 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா, ‘இந்த பிட்சில் ஷாட்களை அடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. 10 ஓவர்கள் முடிந்தபோது 190 ரன்களை அடிப்போது என நினைத்துக்கூட பார்க்கவில்லை. யாராவது கடைசிவரை களத்தில் இருந்தால் ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் வரும் என நினைத்தேன். அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை உயர்த்தினார். இந்த பிட்சில் ஷாட்களை ஆடுவது சுலபம் கிடையாது. அதையும் தாண்டி அவர், பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார். இறுதியில் பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்’ எனக் கூறினார்.