‘எங்களுடைய பீல்டிங்.. ஐயோ என்னத்த சொல்ல…’ – தோல்வியின் பின்னர் புலம்பும் பாக். கேப்டன் பாபர்

15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. தோல்வியின் பின்னர் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் இவ்வாறு தெரிவித்தார்.
‘இலங்கை அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் 8 ஓவர்களின் போது நாங்கள் இலங்கை அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினோம். அடுத்து ராஜபக்ச, ஹசரங்க ஆகியோரின் இணைப்பாட்டம் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. 15-20 ஓட்டங்களை அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டோம். அதேபோன்று களத்தடுப்பும் திருப்திகரமாக இல்லை. வெற்றி, தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம். ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராவதற்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது.’ எனக் கூறினார்.