”என்ன பெரிய பாபர், றிஸ்வான் இருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் இவரை போன்ற ஒரு பினிஷர் பாக். அணியில் இல்;லை” – அப்ரிடி ஆதங்கம்

பாகிஸ்தான் அணியில் இந்திய அணியில் காணப்படும் ஒரு பினிஷர் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை தொடரில் மொத்தமாக 50 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார். பந்துவீச்சிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்கள் விலாசி அசத்தினார். தொடர்ச்சியாக முக்கியமான போட்டிகளில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரை ஒப்பிட்டு பேசி பாகிஸ்தான் அணியில் ஹர்திக் போன்ற ஒரு ஃபினிஷர் இல்லை என்று சாகித் அப்ரிடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அணியில் சதாப் கான், நவாஸ் போன்று தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பங்களிப்பை கொடுத்து வரும் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லை என்று தனது கருத்தில் சாகித் அப்ரிடி குறிப்பிட்டு பேசினார்.
‘இந்திய அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா போன்ற பினிஷர் நம்மிடம் இல்லை. ஃபினிஷிங் ரோலில் ஆசிப் அலி, குஸ்தில் ஆகியோர் இருந்தாலும், அவர்களிடம் பந்துவீச்சு பங்களிப்பு இல்லை. நவாஸ், சதாப் போன்ற சில ஆல்ரவுண்டர்களை நாம் வைத்திருக்கிறோம். சில போட்டிகளில் பந்துவீச்சில் சொதப்புகிறார்கள். சில போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்புகிறார்கள். இப்படி மாறி மாறி சொதப்பலாக இருப்பதால் பாகிஸ்தான் அணியால் தொடர்ச்சியான வெற்றியை பெற முடியவில்லை. ஆஸ்திரேலியா போன்ற மைதானத்தில், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிச்சயமாக தேவை.
புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் ஜமால் பிளேயிங் லெவனில் இருப்பாரா? என்பது சந்தேகம்தான். அவரை ஆட வைக்க வேண்டும் என்பது எனது அறிவுரை. பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டால், பேட்டிங்கிலும் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் அவருக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் ஆஸ்திரேலியா மைதானம் நாம் நினைப்பது போல எளிதானது அல்ல. ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு அங்கு மிகவும் அவசியம்.’ என்றார்.