அந்த மனசு தான் சார் கடவுள்.. நீ போயி ஆடு கார்த்திக். எனக்கு டீம் தான் முக்கியம். சுயநலம் பாராது செயற்பட்ட விராட் கோலியை வரவேற்கும் கிரிக்கெட் உலகம்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் விராட் கோலி சிறிதும் சுயநலமில்லாமல் செயல்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. தென்னாபிரிக்க – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 19வது ஓவரின் இறுதி பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்தார். அரைசதம் அடிக்க வெறும் ஒரு ரன் போதும் என்பதால் விராட் கோலி எப்படியும் கடைசி ஓவரில் அரைசதம் அடிப்பார் என்றே அனைவரும் காத்திருந்தனர்,
ஆனால் விராட் கோலியோ சிறிதும் சுயநலமில்லாமல் தினேஷ் கார்த்திக்கை அவரது ஆட்டத்தை விளையாட அனுமதித்தார். விராட் கோலியின் இந்த பெருந்தன்மையான செயலின் மூலம் இந்திய அணிக்கு கடைசி ஓவரில் 16 (வொய்ட், லெக் பைஸ் இல்லாமல்) ரன்கள் கிடைத்தது. விராட் கோலி பெருந்தன்மையுடன் செயல்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலி விட்டுகொடுத்ததன் மூலம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் குவித்த 16 ரன்களே இந்திய அணிக்கு கடைசியில் வெற்றியையும் பெற்று கொடுத்தது கூடுதல் தகவல்.