தினேஷ் கார்த்திக் – ரிஷப் பண்ட் இடையில் பலத்த மோதல்.. இந்திய அணிக்குள் நிலவும் நெருக்கடி இதுதான் !!

ஆசியக் கிண்ண தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிளேயிங் 11 குறித்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அணியில் ரோஹத் ஷர்மா, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா போன்ற மிகவும் பலமிக்க பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அந்த 7 பேட்ஸ்மேன்களையும் ஒரே பிளேயிங் லெவனில் அடக்குவதுதான் தலைவலியான விஷயம். ஒருவேளை இந்த 7 பேரையும் சேர்த்தால், 4 பௌலர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடியும். ஹார்திக் பாண்டியாவை கட்டாயம் 4 ஓவர்கள் வீச வைக்க வேண்டும்.

இது மிகவும் ஆபத்தான முடிவுதான். டி20 கிரிக்கெட்டில் வெறும் 5 பௌலர்களை நம்பி களமிறங்குவது பின்னடைவுக்கு வழிவகுக்கும். இதனால், ஒரு பேட்ஸ்மேனை குறைத்தே ஆக வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவர் பெஞ்சில் அமர்ந்தே ஆக வேண்டும். சுருக்கமாக சொன்னால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இடையே பலத்த போட்டி இருக்கிறது. இந்த மோதலில் ஒருவருக்குத்தான் வெற்றி கிடைக்கும்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ரிஷப் பந்த், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ”ஒரு இடத்திற்கு நாங்கள் இரண்டு பேர் மோதுகிறோம் என நாங்கள் நினைக்கவில்லை. அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை கொடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். அதில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பிரச்சினை இல்லை” ”எந்த பிட்சில் எந்த பேட்டரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்குத்தான் தெரியும். நிலைமை ஏற்ப அவர்கள்தான் அணியைத் தேர்வு செய்வார்கள். அவர்கள் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டவர்கள்” எனக் கூறினார்.