இலங்கை ரசிகர்களுக்கு விருந்தாக மாறிய ஆப்கானின் வெற்றி.. குண்டு வெடிப்புகளுக்கும், துப்பாக்கி வெடிச்சத்தங்களுக்கும் இடையில் அந்த சத்தங்களை சிக்ஸர் ஓசை மூலம் மறக்கடிக்கச் செய்த நஜீப் !!

ஆகியக்கிண்ண தொடரில் சார்ஜாவில் அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய அணியை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் மிரள வைத்தார். ஸ்டம்பை குறி வைத்து சுழல் தாக்குதலை தொடுத்த அவர் முகமது நைம் (6 ரன்), அனாமுல் ஹக் (5 ரன்), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (11 ரன்) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். ரஷித்கான் தனது பங்குக்கு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமை (1 ரன்) காலி செய்தார். 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வங்காளதேச அணி தள்ளாடியது.

20 ஓவர் முழுமையாக ஆடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்ராகிம் ஜட்ரன் 42 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி), நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்களுடனும்( 17 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். ஏற்கனவே இலங்கையை வீழ்த்தி இருந்த ஆப்கானிஸ்தானுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை எட்டியது.